அதிமுக கூட்டணி ஒரு ‘இயற்கை கூட்டணி’ – திமுகவை ‘அடிமை கூட்டணி’ என இபிஎஸ் கடும் விமர்சனம்!
சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி என்பது கொள்கை ரீதியாகத் தானாக அமைந்த ஒரு “இயற்கை கூட்டணி” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இவ்வாறு சுயமாகவும் இயல்பாகவும் அமைவதே ஒரு உண்மையான (ஒரிஜினல்) கூட்டணிக்கு அடையாளம் என்று அவர் விளக்கமளித்தார்.
தொடர்ந்து திமுக கூட்டணியைச் சாடிய அவர், அது கொள்கை பிடிப்பு இல்லாத ஒரு “அடிமை கூட்டணி” என்று விமர்சித்தார். குறிப்பாக, காங்கிரஸ் கட்சி அந்தக் கூட்டணியில் நீடிக்குமா இல்லையா என்பதே நீண்ட நாட்களாக ஒரு கேள்விக்குறியாக இருந்த நிலையில், தற்போது பெயரளவிற்கே அந்தக் கூட்டணி நீடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். திமுகவின் இந்தச் செயல்பாடுகள் மக்களின் நலனை விட அதிகாரத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும் இபிஎஸ் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.









