மதுரை சித்திரைத் திருவிழா: மே 1-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர் – மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம், வரும் மே மாதம் 1-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருவிழாவுக்கான தேதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, ஏப்ரல் 26-ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், ஏப்ரல் 28-ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினமே அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்படுகிறார். விழாவின் உச்சகட்ட நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 1-ம் தேதி நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த விழாவையொட்டி, பொதுமக்களுக்கான பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.










