சென்னை: அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் – போலீஸ் தீவிர விசாரணை!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் மீது, அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாகச் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிரடிப் புகார் அளித்துள்ளார். பல்கலைக்கழகப் பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர், கடந்த 3 ஆண்டுகளாகத் தனக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வருவதாக அந்த மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவி அளித்துள்ள புகார் மனுவில், “பேராசிரியர் ஞானவேல் பாபு தன்னிடம் தொடர்ந்து ஆபாசமாகப் பேசுவதுடன், இரவு நேரங்களில் செல்போன் வாயிலாக ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன்னைத் தவிர இன்னும் பல மாணவிகளுக்கும் அவர் இதேபோன்று பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும் அந்த மாணவி பரபரப்புத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையர் அருண், விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்து இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி நிறுவனத்தில் பேராசிரியரே இத்தகைய செயலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







