தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!
சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இதுவரை 151 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுவினரின் தீவிர சோதனையில் இந்தத் தொகை மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக ‘சி-விஜில்’ (c-VIGIL) செயலி மூலம் இதுவரை 794 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அந்தப் புகார்கள் அனைத்தின் மீதும் உடனடி விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
வாக்காளர் அடையாள அட்டை குறித்துப் பேசிய அவர், புதிதாக விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேருக்குத் தபால் மூலம் அடையாள அட்டைகள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ளவர்களுக்கு வாக்குப்பதிவு தினத்திற்கு முன்பாகவே அடையாள அட்டைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறினார். அத்துடன், மாநிலம் முழுவதும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வரும் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.








