மேலூர் சுயேச்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு: 18 பட்டி அம்பலகாரர்களிடம் ஆதரவு திரட்டினார்!
மேலூர்:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் அரசியல் களம் மிகுந்த விறுவிறுப்பை எட்டியுள்ளது. இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முருகன், தொகுதி முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தினந்தோறும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வரும் அவர், தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மேலூரின் காவல் தெய்வங்களாகப் போற்றப்படும் காஞ்சிவனம் சுவாமி மற்றும் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து, மேலூர் பகுதியின் பாரம்பரியமிக்க 18 பட்டி அம்பலகாரர்களை நேரில் சந்தித்து, தனது தேர்தல் நோக்கங்களையும், தொகுதி மேம்பாட்டிற்கான திட்டங்களையும் விளக்கி ஆதரவு கோரினார்.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், மேலூர் தொகுதி மக்களின் நலனைப் பாதுகாக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வேண்டியே தாம் இத்தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். பாரம்பரிய அமைப்புகளின் ஆதரவுடன் களமிறங்கியுள்ள முருகனின் இந்தப் பிரச்சாரம், மேலூர் தேர்தல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.








