தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்: கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மத்திய இணையமைச்சரும், உதகை சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளருமான எல்.முருகன் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். கோத்தகிரிக்கு வருகை தந்த அவருக்கு, பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து நிர்வாகிகளிடம் எல்.முருகன் கேட்டறிந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் ஒருங்கிணைந்து தீவிரமாகச் செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பாஜக தலைவர் தருமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டனர்.









