அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
இணையதளங்களில் ஒருவரின் அனுமதியின்றி அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தைத் தவறாகச் சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களைத் திசைதிருப்பக்கூடிய பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடித் தடைகளைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட விரும்பும் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் மாநில அல்லது மாவட்ட அளவிலான ‘ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம்’ (MCMC) முறையான முன் அனுமதிச் சான்றிதழைப் பெற வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் அடையாளத்தைச் சிதைக்கும் வகையிலான உள்ளடக்கங்கள் மற்றும் தேர்தல் நேர்மையைப் பாதிக்கும் பதிவுகள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இத்தகைய தவறான அல்லது சட்டவிரோதமான வீடியோக்கள் கண்டறியப்பட்டால், அவை அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் நீக்கப்படுவதை உறுதி செய்யக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளார்.









