திமுக அரசுக்கு எதிராகத் திரும்பும் ‘தக்னி’ இஸ்லாமியர்கள்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை:
தமிழகத்தில் திமுகவின் நீண்டகால வாக்கு வங்கியாகக் கருதப்பட்ட உருது பேசும் ‘தக்னி’ இஸ்லாமியர்கள், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இஸ்லாமிய சமூகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் பல்வேறு புகார்கள் இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, தமிழக வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், நிரந்தரமான முதன்மை அலுவலர் கூட நியமிக்கப்படாமல் வாரியம் முடங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில குறிப்பிட்ட இஸ்லாமியக் கட்சிகளை மட்டும் முன்னிலைப்படுத்தி, ஒட்டுமொத்த சமுதாயமும் திமுகவின் பின்னால் இருப்பதாக ஒரு மாயையை அரசு உருவாக்கி வருவதாகவும், தேர்தல் நிதிக்காக அந்த இஸ்லாமியக் கட்சிகள் மௌனம் காப்பதாகவும் தக்னி அமைப்புகள் சாடியுள்ளன.
தமிழகத்தில் சுமார் 1.7 சதவீதம் உள்ள தக்னி இஸ்லாமியர்களுக்கு அரசுப் பதவிகளிலோ அல்லது அரசியல் ரீதியாகவோ உரியப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் எழுந்துள்ளது. மேலும், இருமொழிக் கொள்கை என்ற பெயரில் உருது மொழியின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, அது ஒரு சாதாரண மொழிப்பாடமாகத் தரம் தாழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே தலைமை ஹாஜி நியமன விவகாரத்தில் சன்னி பிரிவினர் அதிருப்தியில் உள்ள நிலையில், தற்போது தக்னி இஸ்லாமிய அமைப்புகளும் திமுக அரசுக்கு எதிராகத் திரும்பியிருப்பது ஆளுங்கட்சிக்குச் சவாலாக அமைந்துள்ளது. வரும் தேர்தல்களில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.








