வங்கக் கடலில் உருவாகும் புயல் – சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறவுள்ளதாகவும், அதன் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு–தென்கிழக்கே 780 கிலோமீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.27) தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்து, நாளை தீவிர புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இது ஆந்திரா கடலோரப் பகுதிகளில், குறிப்பாக மசூலிப்பட்டினம்–கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கும் வாய்ப்பும் உள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90–100 கி.மீ., சில நேரங்களில் 110 கி.மீ. வரை அடையக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு அரபிக் கடலிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (அக்.27):
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை (அக்.28):
திருவள்ளூரில் மிக கனமழை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.