தமிழக சட்டப்பேரவை தேர்தல்: பாதுகாப்புப் பணிகளுக்காக சென்னை வந்தடைந்தனர் சிஆர்பிஎப் வீரர்கள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய பாதுகாப்புப் படையினர் (CRPF) சென்னைக்கு வருகை தந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துர்காபூரிலிருந்து 66 வீரர்களைக் கொண்ட சிஆர்பிஎப் பட்டாலியன் சென்னை வண்ணாரப்பேட்டைக்கு வந்து சேர்ந்துள்ளது.
தற்போது வந்துள்ள வீரர்கள் அங்குள்ள முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சென்னை கே.கே.நகர் சமுதாய நலக்கூடத்தில் 72 வீரர்களும், கிண்டியில் 72 வீரர்களும் தங்கியுள்ள நிலையில், தற்போது கூடுதல் வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.