சிவகங்கையில் நெகிழ்ச்சி: குப்பையில் கிடந்த 15 சவரன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!
சிவகங்கை அருகே குப்பையில் தவறுதலாகப் போடப்பட்ட 15 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தற்காலிகத் தூய்மைப் பணியாளர் செல்விக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த டார்ஜிலின் என்பவரது குழந்தை, சிறிய கைப்பையில் இருந்த நகைகளை அறியாமல் குப்பைத் தொட்டியில் போட்டுள்ளது. அந்தப் பகுதியில் குப்பைகளைச் சேகரித்தபோது நகைகளைக் கண்டெடுத்த செல்வி, உடனடியாக அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் நகையின் உரிமையாளர் கண்டறியப்பட்டு, அவரிடம் நகைகள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன. தூய்மைப் பணியாளர் செல்வியின் இந்த உயரிய நேர்மையைப் பாராட்டி, நகையின் உரிமையாளர் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கி தனது நன்றியைத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.