இந்தியாவின் 77% கடல் புல் பரப்பளவு தமிழகத்தில்: வனத்துறையின் தீவிர மறுசீரமைப்புப் பணிகள் வெற்றி!
சென்னை: இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் புல் பரப்பளவில் சுமார் 77 சதவீதம் தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் அமைந்திருப்பதாக வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ‘புளூ கார்பன்’ (Blue Carbon) மண்டலம், புவி வெப்பமடைதலைக் குறைப்பதிலும், அழியும் நிலையில் உள்ள கடல் பசுக்களின் பிரதான உணவாகவும் விளங்கி, கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.
உலக கடல் புல் தினத்தை முன்னிட்டு, வனத்துறை மேற்கொண்டு வரும் முன்னோடி மறுசீரமைப்புப் பணிகள் குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன்படி, சவுக்கு மரச் சட்டங்களில் சணல் கயிறுகளால் பிணைக்கப்பட்ட கடல் புல் நாற்றுகளை, பயிற்சி பெற்ற மூழ்கு வல்லுநர்கள் கடலடியில் நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாகப் பாக் ஜலசந்தியில் 4 ஏக்கர் மற்றும் மன்னார் வளைகுடாவில் 3 ஏக்கர் என மொத்தம் 7 ஏக்கரில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, TNSHORE என்ற பிரத்யேகத் திட்டத்தின் கீழ் மன்னார் வளைகுடாவின் முக்கியத் தீவுகளில் மேலும் 18 ஏக்கர் பரப்பளவில் இந்த மறுசீரமைப்புப் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.