மதுரையில் நெகிழ்ச்சி: மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்தில் தங்கத் தாலி வழங்கிய அண்ணாமலை!
மதுரை:
மதுரையில் நடைபெற்ற என்டிஏ (NDA) கூட்டணி மாநாட்டுத் திடலில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டின் போது, தனலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி பெண், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலையை நேரில் சந்தித்து தனது வாழ்வாதாரக் கஷ்டங்களை விவரித்தார்.
அப்போது, கடும் குடும்ப வறுமையின் காரணமாகத் தனது திருமணத் தாலியை அடகு வைத்திருப்பதாகவும், அதனைத் திரும்ப மீட்க முடியாமல் தவிப்பதாகவும் அவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். மேலும், தனது வாழ்விற்கு ஏதேனும் ஒரு உதவி செய்யுமாறு அண்ணாமலையிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்தப் பெண்ணின் துயரத்தைக் கேட்ட அண்ணாமலை, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்படி, கோரிக்கை வைத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, அடகிலிருந்த தாலியை விட அதிக எடையுள்ள புதிய தங்கத் தாலியை அண்ணாமலை அந்தப் பெண்ணிற்கு வாங்கிக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, அவரது கணவரே தனலட்சுமிக்கு மீண்டும் தாலி அணிவித்தார். ஒரு அரசியல் தலைவரின் இந்த உடனடி மனிதாபிமானச் செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.