சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்: இரவு முழுவதும் பேருந்தில் அவதி என குற்றச்சாட்டு
சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு, மாநகர பேருந்திலேயே அடைத்து வைக்கப்பட்டு இரவு முழுவதும் அலைக்கழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,500 இலிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தொடர் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்ததாகவும், நள்ளிரவு 2 மணி வரை பல்வேறு இடங்களில் அலைக்கழித்த பின்னர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு மாநகர பேருந்தில் அடைத்து வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இரவு முழுவதும் உணவு மற்றும் குடிநீர் இன்றி அவதிப்பட்டதாக கூறிய மாற்றுத்திறனாளிகள், பேருந்திலேயே படுத்து உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும், “மகளிருக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் ரூ.5,000 வரை வழங்கும் அரசு, மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்த முடியாதா?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.