அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை
நெல்லை அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெறப்படுவதாக வெளியான புகார் தொடர்பாக, முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், தென்காசியைச் சேர்ந்த ரத்தினராஜ் என்பவர் தனது மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை டீனிடம் புகார் அளித்த ரத்தினராஜ், வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.