டி20 லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் மோதல் ‘போர்’ போல் பரபரப்பு
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவுள்ள டி20 லீக் போட்டி, இறுதிப் போட்டிக்கு இணையான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல், உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐசிசி தொடர்கள் என்றாலே இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே தனி சுவாரஸ்யம் உண்டு. காரசாரமும், பரபரப்பும் கலந்த இந்த ஆட்டத்தை, இந்திய ரசிகர்கள் வெறும் விளையாட்டாக மட்டுமல்லாது, தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கின்றனர். டி20 உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை 8 முறை இரு அணிகளும் மோதியுள்ள நிலையில், இந்தியா 6 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், இலங்கையின் கொழும்புவில் நடைபெறும் நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் விளையாடாமல் இருக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு, பாகிஸ்தானுடன் அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்த இந்தியா, கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் கைகுலுக்க மறுத்தது பெரும் பேசுபொருளானது. போட்டிக்கு முன்பும், பின்பும் கைகுலுக்காத இந்திய அணி, பாகிஸ்தானை முழுமையாக நிராகரித்ததாக விமர்சிக்கப்பட்டது.
மேலும், இந்தியாவுடன் விளையாட மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்தது. போட்டியை புறக்கணித்தால், இருதரப்பு தொடர்களில் தடை விதிக்கப்படும் என்றும், பாகிஸ்தான் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் சர்வதேச வீரர்கள் பங்கேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, வருவாய் இழப்பை தவிர்க்கும் நோக்கில் பாகிஸ்தான், இந்தியாவுடன் விளையாட ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த அணியின் முன்தின முயற்சிகள் அனைத்தும் வீணானதாக மாறின.
மேலும், இந்திய வீரர்கள் கைகுலுக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை, இது இரு நாடுகளின் அரசியல் சூழலை சார்ந்தது எனக் கூறி ஐசிசி மறுத்துவிட்டது. இதனால், எந்த மாற்றமும் இன்றி போட்டி நடைபெறவுள்ளது.
இவ்வாறு அரசியல், சர்ச்சை மற்றும் பரபரப்புகளுக்கு மத்தியில் நடைபெறுவதால், இந்தியா – பாகிஸ்தான் டி20 லீக் போட்டி, இறுதிப் போட்டியைப் போலவே பெரும் எதிர்பார்ப்பையும், கவனத்தையும் பெற்றுள்ளது.