இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம்: வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP), இந்தியாவுடன் வலுவான மற்றும் சமநிலையான உறவைப் பேண விரும்புவதாக தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான BNP கட்சி இந்தத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தாரிக் ரஹ்மானுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த BNP கட்சி, இந்தியாவுடனான உறவுகள் குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்கால உறவுகள் வங்கதேசத்தின் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டே அமையும் என்றும், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் சமநிலை உறவைப் பேண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.