பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும ஆண்டு விழாவில் பிரபுதேவா நடனம்
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற ஆண்டு நட்சத்திர கலை விழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியில், நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் நோக்கில், பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்கள் ‘நட்சத்திர கலை விழா’ நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.
விழாவின் இறுதிநாளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரபுதேவா, பல்கலைக்கழக வேந்தரின் கடின உழைப்பை பாராட்டி உரையாற்றினார். தொடர்ந்து, மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மேடையில் தனது தனித்துவமான பாணியில் உற்சாகமாக நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தார்.
இதனை கண்ட ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியடைந்தனர். நிகழ்ச்சி விழாக்கோலத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.