மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி ஆகும் சூழல்
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியை தாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாகவும், அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பதிலுரை வழங்குவது ரத்து செய்யப்பட்டதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேசுவதற்கான போதிய நேரம் வழங்கப்படவில்லை என்றும், சபாநாயகர் ஒருபுறச்சார்பாக செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகள் அவரது மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தன.
ஆனால், அந்த தீர்மானத்திற்காக அளிக்கப்பட்ட நோட்டீஸில், நிகழ்வுகள் நடந்த ஆண்டாக 2026 என்பதை குறிப்பிட வேண்டிய இடத்தில் தவறுதலாக 2025 என பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை தவறின் காரணமாக, நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.