அதிமுக ஆட்சி வந்தால் விரகனூர் மதகணை பெரிய படகுத் தளமாக உருவாக்கப்படும் – ராஜன் செல்லப்பா அறிவிப்பு
அதிமுக மீண்டும் ஆட்சியைப் பொறுப்பேற்றால், மதுரை விரகனூர் பகுதியில் உள்ள மதகணை, பரந்த அளவிலான படகு தளமாக மேம்படுத்தப்படும் என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை விரகனூர் மதகணையில் இரும்பு கதவுகள் அமைப்பதும், புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன. இதன் காரணமாக, வருகிற 12ஆம் தேதி முதல் மதகணை பாலம் போக்குவரத்திற்காக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு மாற்று வழித்தடம் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்தச் சூழலில், அந்தப் பகுதிக்கு நேரில் சென்ற திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, நடைபெறவுள்ள பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் ஊடகங்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை விரகனூர் மதகணை, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற மிகப்பெரிய படகு தளமாக மாற்றப்படும் என்று உறுதியாக தெரிவித்தார்.