மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு இந்தியா கடும் மறுப்பு – வர்த்தக ஒப்பந்தத்திலும் உறுதியான நிலைப்பாடு
இந்தியா – அமெரிக்கா இடையே சனிக்கிழமை வெளியிடப்பட்ட இடைக்கால இருதரப்பு வர்த்தக ஒப்பந்தக் கட்டமைப்பில், உலர்ந்த காய்ச்சி வடிகட்டிய தானியங்களுக்கு இந்தியா ஒரு சதவீத அளவிலான வரிச்சலுகையை அறிவித்துள்ளது. ஆனால், இந்தச் சலுகையின் கீழ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் எதுவும் அனுமதிக்கப்படாது என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவாக தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த வரியை 18 சதவீதமாகக் குறைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததுடன், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்ததாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டு அறிக்கையை வெளியிட்டன.
அந்த அறிக்கையில், உலர்ந்த காய்ச்சி வடிகட்டிய தானியங்களுக்கு ஒதுக்கீட்டு முறையில், நாட்டின் மொத்த நுகர்வில் வெறும் ஒரு சதவீத அளவுக்கு மட்டுமே இந்தியா வரிச்சலுகை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பு, நகர்ப்புற விரிவு மற்றும் மக்களின் வருமான உயர்வு ஆகிய காரணங்களால், இந்தியாவில் கால்நடை சார்ந்த பொருட்களுக்கான தேவை வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சுமார் 200 லட்சம் டன் மக்காச்சோளம், 65 லட்சம் டன் கோதுமை மற்றும் 62 லட்சம் டன் சோயாபீன் மாவு தேவைப்படுகிறது. இவை மொத்த கால்நடைத் தீவன தேவையின் இரு மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் வகிக்கின்றன.
ஒருபுறம் தேவை உயர்ந்து வரும் நிலையில், குறைந்த விவசாய நிலப்பரப்பு மற்றும் உற்பத்தித் திறன் குறைபாடு காரணமாக, உள்நாட்டு கால்நடைத் தீவன வழங்கலில் இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் உள்நாட்டு கால்நடைத் தீவன நுகர்வு சுமார் 500 லட்சம் டன்களாக உள்ளது. இதில் அமெரிக்காவுக்கு ஒதுக்கப்படும் அளவு வெறும் 5 லட்சம் டன்கள் மட்டுமே ஆகும்.
கால்நடை தீவனமாகப் பயன்படுத்தப்படும் மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் இறக்குமதியின் மூலம், கோழிப்பண்ணைகள், பால் உற்பத்தி, மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் இந்த ஏற்பாடு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு உற்பத்தியை விட கால்நடைத் தீவனத் தேவை வேகமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், விலை அழுத்தம் காரணமாக 2021ஆம் ஆண்டிலேயே இந்தியா 15 லட்சம் டன் சோயாபீன் தீவனத்தை இறக்குமதி செய்துள்ளது.
மேலும், இலங்கை, சீனா, அமெரிக்கா, தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து 6 லட்சம் டன்களுக்கு மேற்பட்ட கால்நடைத் தீவனமும், நைஜர், டோகோ, பெனின், மொசாம்பிக் நாடுகளிலிருந்து 6 லட்சம் டன் சோயாபீன்ஸும், மியான்மர், உக்ரைன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து 9 லட்சம் டன் மக்காச்சோளமும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவுக்கு வழங்கப்படும் இந்த ஒரு சதவீத வரிச்சலுகை, உள்நாட்டு கால்நடைத் தீவன பற்றாக்குறையை சமாளிக்க உதவுவதோடு, மனித நுகர்வுக்கான உணவுத் தானியங்களை பாதிக்காமல், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.