அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குறித்து ஆளும் அரசு அலட்சியமாக நடந்து கொள்கிறதா என்ற கேள்வியை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களிலேயே தமிழக அரசுப் பள்ளிகளில் விஷப்பூச்சி மற்றும் விஷப்பாம்பு தாக்குதலால் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த வேதனை இன்னும் மாறாத நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழத்தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த மற்றொரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த பள்ளியில் மாணவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, மரக் கிளைகளின் வழியாக ஏறி மேல்நிலை நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியாகி, பொதுமக்களை அச்சுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இளம் குழந்தைகள் நீரில் மூழ்கியோ அல்லது தவறி விழுந்தோ பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால், ஏழை மாணவர்களின் பாதுகாப்பையும் மரியாதையையும் புறக்கணித்தது போல, “வேறு யாரும் கிடைக்கவில்லை” என்ற ஒரே காரணத்தை சொல்லி இந்த விவகாரத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் எளிதாக கடந்து விட்டதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
பணியாளர் பற்றாக்குறையை காரணமாக காட்டி, பள்ளி மாணவர்களைத் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தும் துணிச்சல் ஆசிரியர்களுக்கு எங்கிருந்து வந்தது? இது ஊதியச் செலவை மிச்சப்படுத்த ஆளும் அரசு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏற்படுத்தியுள்ள நடைமுறையா? என்ற கேள்விகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் பற்றி கவலைப்பட்ட பெற்றோர்கள், இப்போது தங்கள் பிள்ளைகள் உயிருடன் பள்ளியிலிருந்து வீடு திரும்புவார்களா என்ற அச்சத்தில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தான் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற அரசின் முழக்கத்துக்கான விளக்கமா என்றும் அவர் வினவினார்.
மேலும், “அப்பா” என்ற அடைமொழியை விரும்பும் முதல்வர் ஸ்டாலின், இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பாரா, அல்லது வழக்கம்போல் மௌனமாக இருப்பாரா? என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.