சென்னையில் சாலை மறியல் நடத்திய வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர், வருவாய்த் துறையில் பணியாற்றும் கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதுடன், மேலும் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
பின்னர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட அவர்கள், தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி ராஜாஜி சாலை நோக்கி நகர்ந்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதேபோல், கடலூரிலும் வருவாய் துறை ஊழியர்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அவர்கள் ஆட்சியர் அலுவலகம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.