திறப்பு விழா முடிந்தும் வீடுகள் ஒப்படைப்பு இல்லை – சிவகங்கை அருகே இலங்கைத் தமிழர்கள் வேதனை
சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் இன்னும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாததால், அங்கு வசிக்கும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
மானாமதுரையை அடுத்த மூங்கில் ஊரணி பகுதியில் செயல்பட்டு வரும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில், தமிழக அரசு ரூ.11.29 கோடி மதிப்பீட்டில் 196 புதிய குடியிருப்புகளை கட்டி முடித்துள்ளது.
இந்த வீடுகளுக்கான திறப்பு விழா நடத்தப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை சாவிகள் பயனாளிகளிடம் வழங்கப்படவில்லை என முகாமில் வசிப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், பழைய மற்றும் பாதுகாப்பற்ற குடியிருப்புகளில் தொடர்ந்து வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.