இந்தியா தீங்கு விளைவிக்கும் கம்யூனிச கொள்கையிலிருந்து வெளியே வர வேண்டும் – அமித் ஷா கருத்து
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் கம்யூனிச கொள்கைகளிலிருந்து நாடு விடுபட வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நக்சல் இயக்கத்தினரிடம் வன்முறையை கைவிட்டு ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அழைப்பு விடுத்தார். சரணடைந்தால் அரசின் சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இடதுசாரி தீவிரவாதம் என்பது வெறும் சட்ட ஒழுங்கு பிரச்னை அல்ல; அது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தால் இயக்கப்படும் பெரிய சவாலாக உள்ளது என்றும் அமித் ஷா கூறினார்.
மேலும், கம்யூனிச சித்தாந்தம் நாட்டின் வளர்ச்சியை முடக்குவதாக விமர்சித்த அவர், இதுபோன்ற கொள்கைகள் நடைமுறையில் இருந்த பகுதிகளில் எந்த வகையான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் வளர்ச்சி காணப்படாதது அதற்கான உதாரணம் எனவும் அவர் கூறினார்.
கேரளா மாநிலத்தில் மட்டுமே ஜனநாயக அரசியல் சூழலில் கம்யூனிச சிந்தனை ஓரளவுக்கு நிலைத்திருப்பதாக குறிப்பிட்ட அமித் ஷா, இருப்பினும் மாற்றத்திற்கான தொடக்கம் திருவனந்தபுரத்தில் இருந்து ஆரம்பமாகி விட்டதாக மக்கள் மனநிலை மாறி வருவதாகவும் தெரிவித்தார்.