ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கும் முதல்வர் ஸ்டாலின் – விபர பட்டியலுடன் பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ்
தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் தாமதமாகும் விவகாரத்தில், நிலம் ஒப்படைக்கப்படாததே முக்கிய காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழகத்திற்கு வழங்கப்படும் ரயில்வே நிதி ஒதுக்கீடு 8.5 மடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல், 2026–27 நிதியாண்டில் தமிழகத்திற்கு 7,611 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற இயலாது என வலியுறுத்தியுள்ள அஸ்வினி வைஷ்ணவ், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில், இதுவரை வெறும் 24 சதவீதம் மட்டுமே மாநில அரசால் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் பணிக்காக தமிழக அரசுக்கு ஏற்கனவே 1,465 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் நிலம் ஒப்படைப்பில் தாமதம் ஏற்பட்டு வருவதால் பல முக்கிய ரயில்வே திட்டங்கள் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய ராமேஸ்வரம்–தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்திற்காக இதுவரை நிலம் கையகப்படுத்தும் பணியே தொடங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தில் 91 சதவீத நிலம் இன்னும் கையகப்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், திண்டிவனம்–செஞ்சி–திருவண்ணாமலை புதிய வழித்தடத்திற்கு தேவையான நிலத்தில் 86 சதவீதம் இன்னும் பெறப்படவில்லை என்றும் அவர் விவரித்துள்ளார்.
நிதி குறைபாடு காரணமாக எந்தத் திட்டமும் முடங்கவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே திட்டங்கள் தாமதம் அடைவதற்கு மாநில அரசின் செயல்பாடுகளே காரணம் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் தெரிவித்துள்ளார்.