வானில் வீரன்… விமானிகளுக்கு தோழன், எதிரிகளுக்கு கனவுக் கொடுமை – “ரஃபேல்” போர் விமானம்
பிரான்ஸ் நாட்டிடமிருந்து கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, தற்சார்பு இந்தியா என்ற தேசிய இலக்கை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணி மற்றும் முக்கியத்துவத்தை விளக்குகிறது இந்த செய்தி.
பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை சுமார் 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் விமானங்கள் பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் வான்வலிமையை அதிகரிக்கும் நோக்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ரஃபேல்-எம் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சூழலில், மேலும் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தியாவின் தீர்மானம், தன்னிறைவு தேசமாக உருவாகும் பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தியாவை ரஃபேல் விமானங்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்ளச் செய்த முக்கிய காரணம், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்களே ஆகும். F4.1 மற்றும் F4.2 வகைகளில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் அமைப்புகள், உலகத் தரத்திலான முன்னேற்ற தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டவை என கூறப்படுகிறது. விமானிகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு ஹெல்மெட்கள், தேவையான அனைத்து தகவல்களையும் நேரடியாக கண்முன்னே காட்டும் வசதியைக் கொண்டுள்ளன.
2030ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரவுள்ள F5 பதிப்பில், வீடியோ கேம் விளையாடுவது போன்ற அதிநவீன அம்சம் இடம்பெற உள்ளது. விமானிகள் பாதுகாப்பான வான்பரப்பில் ரஃபேல் விமானத்தை நிலைநிறுத்தி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ரோபோ ட்ரோன்களை பயன்படுத்தி, ஆபத்தான பகுதிகளில் தாக்குதல் நடத்த முடியும்.
ரஃபேல் விமானத்தை ஒரு வான்வழி உளவுக் கருவி என அழைத்தாலும் அது மிகையல்ல. எதிரி விமானம் ஒன்று கண்டறியப்பட்ட உடனே, அந்த தகவல் பிற ரஃபேல் விமானங்களுக்கும், கடலில் செயல்படும் போர்க்கப்பல்களுக்கும், தரைப்படைக்கும் உடனடியாக பகிரப்படும். இதன் மூலம் இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.
இந்தியாவால் வாங்கப்படவுள்ள 114 ரஃபேல் விமானங்களில் 12 முதல் 18 விமானங்கள் மட்டுமே பிரான்ஸில் தயாரிக்கப்படும். மீதமுள்ள விமானங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கு இது பெரும் ஆதரவாக அமையும்.
மேலும், ரஃபேல் விமானங்களில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அதற்காக பிரான்ஸை முழுமையாக சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் செய்யும் மையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
114 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான முடிவு இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எடுக்கப்பட்டிருந்தாலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்தியா வருகையின் போது, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய பாதுகாப்பு கொள்முதல் வாரியம் விரைவில் அனுமதி வழங்க உள்ளது.