சட்டமன்றத் தேர்தலில் விருப்ப மனு வாங்க தயக்கம் – தேமுதிக அலுவலகம் சோகமான காட்சி
வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெற தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போதிய ஆர்வம் காட்டாததால், அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படும் நிலை உருவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 5ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
தேர்தல் கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலும், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு விநியோகத்தை தேமுதிக தொடங்கியது. பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை மனுக்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், விருப்ப மனு விநியோகத்தின் நான்காவது நாளான நேற்று, கட்சி நிர்வாகிகள் அதிகமாக வராததால், கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமையகம் வெறிச்சோடிய தோற்றத்தில் காணப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை தீவிரமாக விநியோகித்து வரும் நிலையில், தேமுதிக அலுவலகத்தில் காணப்பட்ட இந்த அமைதியான சூழல், அக்கட்சித் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.