செனாப் நதியில் மெகா நீர்மின் திட்டம் – மத்திய அரசு வேகம்
செனாப் ஆற்றின் குறுக்கே மிகப் பெரிய நீர்மின் மின் நிலையத்தை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதற்காக ரூ.5,129 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானுக்கு பதிலளிக்கும் நடவடிக்கையாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் நீரை பயன்படுத்தி பெரிய அளவிலான நீர்மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சாவல்கோட் நீர்மின் திட்டத்திற்காக மட்டும் ரூ.5,129 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆண்டுக்கு சுமார் 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தொடங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரல் மார்ச் 12-ஆம் தேதி ஆரம்பமாகி, மார்ச் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான அறிவிப்பை தேசிய நீர்மின் கழகம் வெளியிட்டுள்ளது.
திட்டம் நிறைவேறும் பட்சத்தில், இந்தியாவுக்கு கூடுதல் நீர்மின் வளமும் நீர் சேமிப்பும் கிடைக்கும் எனவும், அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு பாயும் நீரின் அளவு கணிசமாக குறையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.