நடுவே நிறுத்தப்பட்ட வினாத்தாள் – குரூப்–2, 2A தேர்வர்கள் கடும் அதிர்ச்சி
திருச்சியில் குரூப்–2 மற்றும் குரூப்–2A முதன்மைத் தேர்வில் ஈடுபட்டிருந்த தேர்வர்களிடமிருந்து, தேர்வு நடந்து கொண்டிருக்கும் போதே வினாத்தாள்கள் திரும்பப் பெறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குரூப்–2 முதன்மைத் தேர்வு நடைபெற்று வந்தது. தேர்வர்கள் கவனமாக விடைகளை எழுதி கொண்டிருந்த நேரத்தில், திடீரென தேர்வு அறைக்குள் வந்த அதிகாரிகள், தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்து, வினாத்தாள்களை உடனடியாக பறிமுதல் செய்தனர்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள், மன உளைச்சலுடன் தேர்வு அறைகளிலிருந்து வெளியேறினர்.
இதேபோன்ற நிலை புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஏற்பட்டது. அங்கு குரூப்–2 மற்றும் 2A தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்கள், தேர்வு திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்டனர். திடீர் ரத்து அறிவிப்பால் தேர்வர்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகினர்.
குரூப்–2, 2A தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் உடனடியாக மையங்களுக்கு சென்றடையாததால், சேலம் தேர்வு மையத்தில் தேர்வர்கள் சுமார் இரண்டு மணி நேரம் தேர்வு எழுதிய பின்னரே வெளியேற்றப்பட்டனர். இந்தத் தேர்வுக்காக பல ஆண்டுகளாக தயார் செய்தோம், ஆனால் அரசின் அலட்சியத்தால் எங்களது நேரமும் உழைப்பும் வீணாகிவிட்டது என தேர்வர்கள் குற்றம்சாட்டினர்.
கோவையிலும் டிஎன்பிஎஸ்சி குரூப்–2 முதன்மைத் தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில், பாதியிலேயே தேர்வு நிறுத்தப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு காலைத் தேர்வுகள் தொடங்கியிருந்தன. இதற்கிடையே, சென்னையில் ஏற்பட்ட தேர்வு மையக் குழப்பங்களின் காரணமாக, தமிழகம் முழுவதும் குரூப்–2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, கோவையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் நடுவே தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதேபோல், திருப்பூரிலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து தொடர்பான சுற்றறிக்கை தாமதமாக கிடைத்ததால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தேர்வு எழுதியவர்கள் பின்னர் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவங்கள் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளன.