மாணவர்கள் இணையதளங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் – பிரதமர் மோடி அறிவுரை
மாணவர்கள் இணைய வசதிகளை தவறாக பயன்படுத்தி தேவையற்ற வகையில் நேரத்தை செலவழிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு மனஅழுத்தத்தை குறைக்கும் நோக்கில், ஆண்டுதோறும் “பரிக்ஷா பே சர்ச்சா” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி வருகிறார். வழக்கமாக டெல்லியில் மட்டும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, நடப்பு ஆண்டில் தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடத்தப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற “பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சியின் 9வது பதிப்பில் மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, 2047ஆம் ஆண்டில் அனைவருக்கும் 35 முதல் 40 வயது வரை இருக்கும் என்றும், அக்காலகட்டத்தில் உங்களைச் சுற்றி பல மாற்றங்களும் நிகழ்வுகளும் நடைபெற்று கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
“வளர்ந்த இந்தியா” என்ற இலக்கை அடைய அரசு கடுமையாக செயல்பட்டு வரும் நிலையில், பொதுமக்களும் அதற்காக உழைக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். அதேபோல், நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கும் மக்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், இணைய சேவைகள் குறைந்த செலவில் கிடைக்கின்றன என்பதற்காக, மாணவர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் தேவையற்ற முறையில் நேரத்தை வீணடிக்கக் கூடாது என பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.