ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இறைவனை வழிபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் ஆடி திருக்கல்யாணம், மாசி மகம் மற்றும் மகா சிவராத்திரி போன்ற திருவிழாக்கள் மிகுந்த சிறப்புடன் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்ற நிகழ்வுடன் விமரிசையாக ஆரம்பமானது.
அதிகாலை வேளையில் கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றன. பின்னர், சுவாமி சன்னதிக்கு முன்பாக அமைந்துள்ள தங்க கொடிமரத்தில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, மீன லக்னத்தில் விழா கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வை காணவும், சாமி தரிசனம் செய்யவும் பெருந்திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர்.