மலேசியாவில் தமிழர்கள் அதிகம் இருப்பதைப் போல என் அரசிலும் தமிழர்கள் கணிசமாக உள்ளனர் – பிரதமர் மோடி
மலேசியாவில் தமிழ் மக்களின் பங்களிப்பு பெருமளவில் இருப்பதுபோல், தனது அமைச்சரவையிலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் தெரிவித்தார்.
அரசுத் துறைச் சார்ந்த வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியா சென்றிருந்த பிரதமர் மோடிக்கு, கோலாலம்பூரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினருக்கான சிறப்பு நிகழ்ச்சியில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியை பிரதமர் மோடியும், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமும் இணைந்து கண்டு ரசித்தனர்.
பின்னர் இந்திய வேருடைய மக்களை நோக்கி உரையாற்றிய பிரதமர் மோடி, உலகில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசிக்கும் இரண்டாவது பெரிய நாடாக மலேசியா திகழ்கிறது என்றும், இந்தியா–மலேசியா நட்புறவு இதுவரை இல்லாத அளவுக்கு வலுப்பெற்றுள்ளதாகவும் கூறினார். எம்ஜிஆர் பாடல்கள், இந்திய இசை மற்றும் திரைப்படங்கள் மலேசியாவில் பரவலாக விரும்பப்படுவதாக குறிப்பிட்ட அவர், எம்ஜிஆரின் தமிழ் பாடல்களை பிரதமர் அன்வர் இப்ராஹிம் விரும்புவது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ் மொழி இந்தியாவை உலகின் பல நாடுகளுடன் இணைக்கும் ஒரு முக்கிய பாலமாக விளங்குகிறது என்றும், தமிழ் பண்பாடு எல்லைகளைக் கடந்த உலகளாவிய தன்மை கொண்டது என்றும் கூறினார். தமிழின் இலக்கிய மரபு காலத்தால் அழியாத புகழை பெற்றது என்றும், விரைவில் மலேசியாவில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
மேலும், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், எல். முருகன் உள்ளிட்டோர் தமிழர்கள் என்பதையும் குறிப்பிட்ட பிரதமர், மலேசியாவில் போலவே தனது அரசிலும் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக தெரிவித்தார்.