அரசுத் தேர்வுகளை அலட்சியமாக கையாளும் அறிவாலய ஆட்சி
TNPSC குரூப்–2 மற்றும் குரூப்–2A தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதா? அல்லது இதற்குப் பின்னால் முன்கூட்டியே வகுக்கப்பட்ட திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு முதலமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு மையங்களை ஒதுக்கும் பணிகளில் அரசு மேற்கொண்ட நிர்வாகப் பிழைகளின் விளைவாக, இன்று தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த TNPSC குரூப்–2 மற்றும் 2A தேர்வுகள் நிறுத்தப்பட்டதாக வரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியாளர்களின் நிர்வாகத் தவறுகளால் இளைஞர்கள் பல மாதங்கள் செலுத்திய கடின உழைப்பு வீணாகும் நிலையை எக்காரணத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்திற்கு வந்தவுடன் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என்றும், அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் ஒழுங்காக நடத்தப்படாமல் இருப்பதோடு, லஞ்சம் மற்றும் கமிஷன் அடிப்படையிலேயே பதவிகள் வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சுமார் 9 ஆயிரம் தேர்வாளர்கள் மட்டுமே பங்கேற்கும் குரூப்–2 மற்றும் 2A தேர்வுகளிலேயே இத்தனை நிர்வாகக் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகிறது என்றும், அரசுத் தேர்வுகளில் ஏற்பட்ட இந்த குழப்பங்கள் தற்செயலாக நடந்ததா அல்லது தேர்வை ரத்து செய்ய அரசே திட்டமிட்டு மேற்கொண்ட நடவடிக்கையா என்பதை ஆதாரங்களுடன் மக்களிடம் விளக்குவது முதலமைச்சரின் நெறிப்பொறுப்பு என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.