ரஷ்யா–உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் உயிரிழப்பு – அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்
ரஷ்யாவுடன் நடைபெற்று வரும் போரில் இதுவரை சுமார் 55,000 உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா–உக்ரைன் இடையிலான போர் நான்காண்டுகளை கடந்தும் தொடரும் நிலையில், ஜெலென்ஸ்கி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை உறுதிப்படுத்தினார். மேலும், போரின் போது பலர் அதிகாரப்பூர்வமாக காணாமல் போனவர்களாகப் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, ரஷ்யா–உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக போர் கைதிகள் பரிமாற்றம் செய்ய இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முன்முயற்சியால் நடைபெற்று வரும் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தகவல் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், உக்ரைன் மற்றும் ரஷ்யா தரப்பில் தலா 157 போர் கைதிகள் என மொத்தம் 314 பேர் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களில் நடைபெறும் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவாகும் என்றும், இந்த நடவடிக்கை நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதாகவும் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டுள்ளார்.