வேலைக்கு செல்ல அறிவுறுத்திய தாய் – ஆத்திரத்தில் மகன் கொடூர செயல்
சென்னை நொளம்பூர் பகுதியில், வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்திய பெற்ற தாயை மகன் கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆக்ஸலியா என்பவர், தனது மகன் நிக்கிலுடன் வசித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த நிக்கில், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் சென்னை திரும்பிய பிறகு எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வேலைக்கு செல்லுமாறு தாய் அறிவுறுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த நிக்கில், வீட்டில் இருந்த கத்தியை பயன்படுத்தி தாயை தாக்கியுள்ளார். அதன் பின்னர், அவர் வீட்டின் படுக்கையறையில் சென்று தூங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிக்கிலை சந்திக்க வந்த அவரது நண்பர், நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஆக்ஸலியா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், படுக்கையறையில் இருந்த நிக்கிலிடம் விசாரணை நடத்திய போது, அவர் தாயைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, நிக்கிலை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.