காங்கிரஸுடன் பிரிவுக்கு தயாராகிறதா திமுக? – அரசியல் வட்டாரங்களில் பரவும் பரபரப்பு தகவல்
வரும் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கி வரும் காங்கிரஸ் கட்சியுடன் இனி பயணிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக தலைமையகம் வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த சில மூத்த அமைச்சர்கள், கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதாலேயே மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் நிலைப்பாட்டை கடைபிடிக்க வேண்டிய சூழல் உருவாகி வருவதாக கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், காங்கிரஸ் இல்லாத கூட்டணியே திமுகவுக்கு உகந்ததாக இருக்கும் என அமைச்சர்கள் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், காங்கிரஸ் கட்சியை திமுகவே முன்வந்து வெளியேற்றுவது சரியானதாக இருக்காது என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாகவும், அவர்கள் தாங்களாகவே விலகினால் அதனை ஏற்கலாம் என்ற பதிலை அமைச்சர்களிடம் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கூட்டணியை உறுதி செய்யும் நோக்கில், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி எம்பி சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
எனினும், இதுவரை கூட்டணி குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படாததால், தொகுதி பங்கீடு தொடர்பான பணிகளை தொடங்க முடியாமல் திமுக தலைமையகம் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.