அனுமதியற்ற மதுபான விற்பனை – போலீஸ் தலையீடு குறித்து கேள்விகள்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், அதனை பதிவு செய்ய முயன்ற செய்தியாளரை காவல்துறையினர் தடுத்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பக்கோடா பாயிண்ட் அருகே செயல்பட்டு வரும் ஒரு தங்கும் விடுதியில், காவல் துறையினரின் ஆதரவுடன் மதுபான விற்பனை நடைபெறுவதாக செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலின் அடிப்படையில் அந்த இடத்துக்கு சென்ற செய்தியாளர், காணொளி பதிவு செய்ய முயன்றபோது, அங்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபர்மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.