திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தை உத்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வருஷாபிஷேகத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருநாளான தை உத்திரத்தன்று, திருச்செந்தூர் கோயிலில் ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் நடத்தப்படுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் தை உத்திர திருவிழாவை முன்னிட்டு வருஷாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை நேரத்தில் கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை மற்றும் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து, தங்க கொடிமரம் அருகே அமைக்கப்பட்ட கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதையடுத்து, மூலவர் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த புனித நிகழ்வை காணவும், அருள்பெறவும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடி சாமி தரிசனம் செய்தனர்.