பிரதமர் மோடியை இலக்காகக் கொண்ட காங்கிரஸ் சதி? – பரபரப்பு தகவல்கள்
மக்களவையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தாக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பிக்கள் திட்டமிட்டதாக சில ஊடகவியலாளர்கள் வெளியிட்ட தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மக்களவையில் நேற்று பிரதமர் மோடி பேசவிருந்தார். இதற்காக அவர் உரையாற்ற தயாராக இருந்த வேளையில், அவரை தாக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சதி திட்டம் தீட்டியதாக தகவல்கள் வெளியானது.
இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே, அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க சபாநாயகர் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
பிரதமரை தாக்கும் முயற்சியில் காங்கிரஸ் எம்.பிக்கள் ஈடுபட்டிருந்ததாக, ஆங்கில ஊடகவியலாளர் பல்லவி கோஷ் உள்ளிட்டோர் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, பிரதமர் மக்களவையில் உரையாற்றாதது வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவமாக குறிப்பிடப்படுகிறது.
காங்கிரஸ் உறுப்பினர்களின் சதித்திட்டம் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்ததையடுத்து, நேற்று மக்களவையை ஒத்திவைக்கப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மீது தாக்குதல் நடந்திருந்தால், அது இந்திய ஜனநாயகத்தின் மரியாதைக்கும் அடிப்படை மதிப்புகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நேற்று பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டாம் எனத் தானே அறிவுறுத்தியதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
ஜோதிமணி, சுதா, வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்ட 6 காங்கிரஸ் எம்.பிக்கள் பிரதமரை முற்றுகையிட திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் எம்.பிக்களை முன்வைத்து பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.