இந்தியா கேட் மாதிரியில் வாஷிங்டனில் பிரமாண்ட வெற்றி வளைவு – டிரம்ப் முன்மொழிவு
டெல்லியில் அமைந்துள்ள இந்தியா கேட் போன்ற ஒரு பிரமாண்ட வளைவைக், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு 250 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில், வாஷிங்டனில் மிகப் பெரிய நினைவுச் சின்ன வளைவை உருவாக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக, 123 அடி மற்றும் 165 அடி உயரத்தில் வளைவு அமைக்கும் வகையிலான வடிவமைப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதிகாரிகளால் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆனால், அந்த முன்மொழிவுகளை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வியக்க வைக்கும் அளவுக்கு, வளைவு இன்னும் பெரிதாகவும் பிரமாண்டமாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், இந்திய தலைநகர் டெல்லியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்தியா கேட் நினைவுச் சின்னத்தின் புகைப்படத்தை, அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்தியாவின் புகழ்பெற்ற அந்த வெற்றி வளைவை விட, வாஷிங்டனில் அமைக்கப்படும் புதிய வளைவு இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.