அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள தீர்த்தகாடு பகுதியில் நீண்ட ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியாகக் கருதப்படும் வண்டியூர் தீர்த்தகாடு பகுதியில், 300-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் அரசு அனுமதியுடன் பட்டா பெற்று பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். இருப்பினும், குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு புகார் மனு அளித்தனர். குறிப்பாக, மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருவதாக பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும், தீர்த்தகாடு பகுதியை அமைச்சர் மூர்த்தி இதுவரை நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அரசு இ-பட்டா வழங்கிய பிறகும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காததற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பிய அவர்கள், உடனடியாக தீர்த்தகாடு பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.