பேராவூரணி பகுதியில் தரக்குறைவாக கட்டப்படும் அரசு பள்ளி கட்டிடம் – வெளியான காணொளி பரபரப்பை ஏற்படுத்தியது
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கட்டப்பட்டு வரும் அரசு பள்ளி கட்டிடம், கட்டுமான விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளது.
பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பொன்னிங்கண்ணிக்காடு கிராமத்தில் நடுநிலைப் பள்ளிக்காக புதிய கட்டிடம் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பள்ளி கட்டுமானத்தில் தேவையான அடித்தள பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அடித்தளத்திற்கு தேவையான கான்கிரீட் மற்றும் ஜல்லி-சிமெண்ட் கலவை பயன்படுத்தப்படாமல், வெறும் மண்ணை மட்டுமே நிரப்பி பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் கட்டிடம் உறுதியற்ற நிலையில் உருவாகி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு தரமின்றி கட்டப்படும் பள்ளி கட்டிடம் எதிர்காலத்தில் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், இதில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறும் நிலை உருவாகும் எனவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த பள்ளி கட்டுமான பணிகளை உடனடியாக ஆய்வு செய்து, தரமற்ற முறையில் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.