பகவத் கீதையை மையமாக கொண்ட குழந்தைகளின் நாடகம், நடனம் – பாராட்டுகள் குவிந்த சிறப்பான நிகழ்வு
சென்னை தியாகராய நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், பகவத் கீதையை மையமாக கொண்டு குழந்தைகள் அரங்கேற்றிய நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்டு, கைத்தட்டல்களை அள்ளியது.
வாழ்க்கையின் கடமைகள், தர்மம், கர்மா, பக்தி ஆகியவற்றை எளிய முறையில் எடுத்துரைக்கும் ஆன்மிக வழிகாட்டியான பகவத் கீதையை, இளம்வயது குழந்தைகள் தங்களின் நடிப்பு மற்றும் அசைவுகளின் மூலம் உயிர்ப்பித்து காட்டியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
சென்னையின் அனைத்து கிளைகளிலும் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர்களின் திட்டப் பணிகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வில், Pre KG முதல் LKG வரை பயிலும் மழலைகள் பங்கேற்ற பகவத் கீதையை மையப்படுத்திய நாடகம் நிகழ்ச்சியின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது. பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த பழமையான கலாச்சாரத்தை நினைவூட்டும் விதமாக அமைந்த நாடகம் பார்வையாளர்களை நெகிழ வைத்தது.
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், பள்ளி திட்டப் பணிக்காக பகவத் கீதையை அறிந்து கொள்ளும் விதத்தில் பக்தி முறைகளை தத்ரூபமாக நடித்துக் காட்டியது, திரையில் காணும் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக அமைந்தது.
மேலும், 4 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சமஸ்கிருதத் துறை மாணவர்கள், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள முக்கிய கருத்துகள், குருக்ஷேத்திரப் போர், விஷ்ணுவின் அவதாரங்கள், ஆழ்வார்கள், துரியோதனின் வாழ்க்கை நிலை உள்ளிட்ட நிகழ்வுகளை காட்சிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.
இன்றைய கால குழந்தைகளின் உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களை சுட்டிக்காட்டி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு விளைவிக்கும் தீமைகளை விளக்கும் சிறப்பு நாடகமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்துக்கள் மட்டுமின்றி, அனைத்து மக்களுக்கும் பொதுவான வாழ்க்கைத் தத்துவத்தை கற்றுத் தரும் பகவத் கீதையை பள்ளி திட்டமாக எடுத்துக் கொண்டு, நாடகங்கள் மற்றும் கண்காட்சிகள் மூலம் வெளிப்படுத்திய இந்த மழலைச் செல்வங்கள், அனைவரின் பாராட்டுகளையும் பெருமையையும் பெற்றனர்.
பகவத் கீதை எல்லோருக்குமானது என்பதை அழகாக உணர்த்திய குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!