2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் பட்டியலில் இடம்
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்த ஆண்டில்
- 5 பேருக்கு பத்ம விபூஷன்,
- 13 பேருக்கு பத்ம பூஷன்,
- 113 பேருக்கு பத்ம ஸ்ரீ
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மற்றும் கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலையாள நடிகர் மம்முட்டி, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, சமூக செயற்பாட்டாளர் மயிலானந்தன் உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளது.
அதேபோல், நடிகர் ஆர். மாதவன், சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி உள்ளிட்டோருக்கும், விளையாட்டுப் பிரிவில் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், ஹாக்கி வீராங்கனை சவிதா புனியா உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹெச்.வி. ஹண்டே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டோரும் இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற உள்ளனர்.
இதனிடையே, குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரியான கர்னல் சோபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, உலக நாடுகளுக்கு இந்திய ராணுவத்தின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்ததற்காக இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.
அதேபோல், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்து திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு, நாட்டின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டிற்கு சிறப்பான பங்களிப்பு வழங்கிய அனைத்து பத்ம விருதாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், அவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் சேவை சமூக வளமைக்கு துணை நிற்கும் என்றும், இந்த கௌரவம் அடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.