கரூர் நெரிசல் விபத்து வழக்கு: சிபிஐ கடிதம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரண வழக்கில், சிபிஐ விசாரணை அதிகாரிகள் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வ கடிதத்தை ஒப்படைத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 26-ம் தேதி, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கரூர் நகர காவல்துறை முதலில் விசாரணை நடத்தியது. பின்னர், உயர் நீதிமன்றம் அக்டோபர் 3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க உத்தரவிட்டது.
அந்த குழு அக்டோபர் 5-ம் தேதி முதல் விசாரணை தொடங்கியது. ஆனால், உச்ச நீதிமன்றம் அக்டோபர் 13-ம் தேதி இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (CBI) மாற்ற உத்தரவிட்டது.
அதன் பேரில் அக்டோபர் 16-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்தனர். அடுத்த நாள், அக்டோபர் 17-ம் தேதி, SIT குழு சேகரித்த அனைத்து வழக்கு ஆவணங்களும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டன.
தற்போது, சிபிஐ இன்ஸ்பெக்டர் நிலை அதிகாரி ஒருவர் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி, அந்த ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், சிபிஐ தலைமையகத்திலிருந்து வந்த கடிதம் நேற்று (அக்டோபர் 23) கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை மாஜிஸ்ட்ரேட் சார்லஸ் ஆல் பெர்ட் பெற்றுக்கொண்டார்.
முதன்மை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி. பரத்குமார் விடுப்பில் இருப்பதால், அந்த கடிதம் இரண்டாம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், அந்தக் கடிதம் இதுவரை திறக்கப்படாததால், அதன் உள்ளடக்கம் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.