உலகின் “அரிசி மன்னன்” பட்டத்தை கைப்பற்றிய இந்தியா : உற்பத்தியில் சீனாவை முந்திய சாதனை
பல ஆண்டுகளாக அரிசி உற்பத்தியில் முன்னணியில் இருந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி, உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அரிசி ஏற்றுமதி முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்த வரலாற்றுச் சாதனையை இந்தியா எவ்வாறு நிகழ்த்தியது என்பதைப் பார்ப்போம்.
அரிசி உற்பத்தியில் நீண்ட காலமாக நிலவிய சீனாவின் ஆதிக்கத்திற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சீனாவைத் தாண்டி, உலகளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலக அரிசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 28 சதவீதத்தை கடந்துள்ளதாகவும், இது கால்பகுதியை விட அதிகமானதாகவும் அமெரிக்க வேளாண்துறை வெளியிட்ட சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் வெளியான அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் அரிசி உற்பத்தி 152 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ள நிலையில், சீனாவின் உற்பத்தி 146 மில்லியன் மெட்ரிக் டன்னாக பதிவாகியுள்ளது. இதன் மூலம், உலகின் “அரிசி ராஜா” என்ற பட்டத்தை இந்தியா பெற்றுள்ளது.
அரிசியின் வரலாற்றைப் பற்றி பேசினால், இந்தியாவின் பெயர் முன்னணியில் நிற்கும். ஏனெனில், பழங்காலம் முதல் இந்தியாவில் அரிசி பயிரிடப்பட்டு வந்ததுடன், அது அன்றாட உணவிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1.23 லட்சம் அரிசி வகைகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 60 ஆயிரம் வகைகள் இந்தியாவிலேயே காணப்படுகின்றன.
இது இந்தியாவில் அரிசி சாகுபடியின் பல்வகைத் தன்மையையும், அதன் வளமையும் வெளிப்படுத்துகிறது. இருப்பினும், உற்பத்தி அளவில் இந்தியா நீண்ட காலமாக சீனாவை விட பின்தங்கியே இருந்து வந்தது.
இன்று இந்தியாவில் விளையும் அரிசி உலகின் 172 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம், அரிசி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய பொருளாதார கருவியாகவும் மாறியுள்ளது. 2024–25 நிதியாண்டில், இந்தியா 4 லட்சத்து 50 ஆயிரத்து 840 கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த ஏற்றுமதியில் அரிசி மட்டும் 24 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதி மூலம், ஒரே ஆண்டில் இந்தியா 1 லட்சத்து 5 ஆயிரத்து 720 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளது.
இந்த வளர்ச்சியின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறும் உள்ளது. சுதந்திரம் பெற்ற காலத்தில், இந்தியா ஆண்டுக்கு வெறும் 20.58 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி மட்டுமே உற்பத்தி செய்தது. ஆனால், 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 152 மில்லியன் மெட்ரிக் டன்னாக அபாரமாக உயர்ந்துள்ளது.
1960களில் இந்தியா கடும் உணவுத் தானிய பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, நீண்ட தண்டு கொண்ட பாரம்பரிய நெல் வகைகளே அதிகம் பயிரிடப்பட்டன. இதனால், ஒரு ஹெக்டேருக்கு சுமார் 800 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்தது.
அந்த காலகட்டத்தில் யூரியா போன்ற ரசாயன உரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. உரம் மற்றும் கூடுதல் நீர் பயன்படுத்தினாலும், குட்டையான மற்றும் வலுவான தண்டு கொண்ட நெல் வகைகள் இல்லாதது பெரிய தடையாக இருந்தது. இதனால், அதிக மகசூல் தரக்கூடிய குள்ள நெல் வகைகளின் தேவை உருவானது.
இந்த நிலையில், தைவான் தனது குள்ள நெல் வகையான ‘தைச்சுங் நேட்டிங்–1’ (TN1) ஐ இந்தியாவிற்கு வழங்கியது. இதுவே இந்தியாவில் பசுமை புரட்சிக்கு அடித்தளமாக அமைந்து, நெல் சாகுபடியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, 1968ஆம் ஆண்டு சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் ‘ஐ.ஆர்–8’ என்ற புதிய நெல் வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த வகை “அதிசய அரிசி” என்று அழைக்கப்பட்டு, உற்பத்தியில் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வந்தது.
1969ஆம் ஆண்டு முதல், இந்திய விஞ்ஞானிகள் இவ்வகைகளை கலப்பினமாக உருவாக்கத் தொடங்கினர். ஒடிசாவைச் சேர்ந்த T-141 என்ற உள்ளூர் நெல் வகையை TN1 உடன் கலப்பினம் செய்து, ‘ஜெயா’ என்ற புதிய குள்ள நெல் வகை உருவாக்கப்பட்டது. இதன் தண்டு நீளம் 150 சென்டிமீட்டரிலிருந்து 90 சென்டிமீட்டராகக் குறைந்ததால், மகசூல் கணிசமாக உயர்ந்தது.
உலகில் அதிக அளவில் பாஸ்மதி அரிசி உற்பத்தி செய்யும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது. பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்திய பாஸ்மதி வகைகளுக்கு உலகளாவிய அளவில் தனித்துவமான சந்தை உருவாகியுள்ளது. மேலும், உலகிலேயே மிக நீளமான அரிசி தானியத்தை உற்பத்தி செய்யும் சாதனையையும் இந்தியா பெற்றுள்ளது.
அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், ஒரு முக்கிய அம்சத்தில் இன்னும் சவால் தொடர்கிறது. சீனாவை விட இந்தியாவில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு அதிகமாக இருந்தாலும், ஒரு ஹெக்டேருக்கு கிடைக்கும் மகசூல் குறைவாகவே உள்ளது.
மத்திய வேளாண் அமைச்சகத் தரவுகளின்படி, 1950–51ஆம் ஆண்டில் இந்தியா ஒரு ஹெக்டேருக்கு வெறும் 668 கிலோ அரிசி மட்டுமே உற்பத்தி செய்தது. 2025–26ஆம் ஆண்டில் இந்த அளவு சராசரியாக ஹெக்டேருக்கு 4,390 கிலோவாக உயரும் என அமெரிக்க வேளாண்துறை (USDA) கணித்துள்ளது.
இருப்பினும், இது உலக சராசரியைவிட குறைவானதே. சீனாவில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 7,100 கிலோ அரிசி கிடைக்கும் நிலையில், இந்தியாவின் 4,390 கிலோ மகசூல் எதிர்காலத்தில் கடந்து செல்ல வேண்டிய முக்கிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.