காசா பகுதி நிர்வாகத்தில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்

இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஹமாஸ் குழுவினர் நேற்று 8 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கடும் போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முயற்சியால், கடந்த 9-ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 13-ம் தேதி எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், ஹமாஸ் குழுவினர் ஆயுதங்களை துறந்து காசா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும், காசா நிர்வாகத்திற்காக சர்வதேச அளவிலான குழு அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட 20 அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் காசா பகுதியை விட்டு வெளியேறுவது உள்ளிட்ட சில அம்சங்களை ஹமாஸ் ஏற்கவில்லை.

இதனிடையே, ஒப்பந்தப்படி இஸ்ரேல் படையினர் வெளியேறியதும், காசா பகுதியை ஹமாஸ் குழுவினர் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டனர். அவர்கள் தற்போது சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காசா பகுதியை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக, ஆயுதம் ஏந்திய பாலஸ்தீனக் குழுக்களுக்கும் ஹமாஸ் குழுக்களுக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அதில், கண்கள் கட்டப்பட்ட நிலையில் 8 பேர் சாலையில் மண்டியிட்டு இருந்தபோது, ஹமாஸ் குழுவினர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்கின்றனர். அப்போது அவர்கள், “அல்லாஹு அக்பர்… இவர்கள் குற்றவாளிகள், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்” எனக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் எச்சரிக்கை:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஹமாஸ் குழுவினர் மிகவும் மோசமான 2 குழுவினரின் உறுப்பினர்களை கொன்றுள்ளனர். இந்தச் செயல் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஆனால் அவர்கள் ஆயுதங்களை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை என்றால், நாங்கள் துறக்க வைப்போம் — அது விரைவாக நடக்கும்” என எச்சரித்தார்.

இதற்கிடையில், ஒப்பந்தப்படி கொல்லப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகளின் உடல்களை ஒப்படைக்காவிட்டால், காசா பகுதிக்கு செல்லும் நிவாரண வாகனங்களில் பாதியை அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, ஹமாஸ் குழுவினர் நேற்று முன்தினம் மேலும் 4 பிணைக்கைதிகளின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தனர். ஆனால் அதில் ஒருவரின் உடல் தங்களுடைய கைதி அல்ல என்று இஸ்ரேல் நேற்று தெரிவித்துள்ளது.

Facebook Comments Box