சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் கலந்துகொள்வது: ட்ரம்ப் விமர்சனம்
சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா மற்றும் வடகொரிய தலைவர்கள் கலந்து கொண்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் எழுதியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் 80 ஆண்டுகள் நிறைவடைவை நினைவுகூர்ந்து, சீனாவில் நேற்று விழா நடத்தப்பட்டது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த ராணுவ நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் உள்ளிட்ட சீனாவின் 26 நட்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சீனாவின் நவீன ஆயுதங்கள், ராணுவ தொழில்நுட்பங்கள் மற்றும் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. திறந்த வாகனத்தில் ராணுவ வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், “எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் சீனா பயப்படாது; மனிதகுலம் மீண்டும் அமைதி அல்லது போர் என்ற தேர்வுக்கே அழைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தான் சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து சீனா சுதந்திரத்தைப் பெற அமெரிக்கா வழங்கிய ஆதரவையும், பல அமெரிக்கர்களின் உயிர்ப்பணியையும் ஜி ஜின்பிங் மதிப்பாரா என்பது மிகப் பெரிய கேள்வி. சீன வெற்றிக்காக உயிரிழந்த அமெரிக்கர்கள் நினைவுகூரப்படுவார்கள் என நம்புகிறேன். அதே நேரத்தில், அமெரிக்காவுக்கு எதிரான செயல்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சுமார் இரண்டரை மணிநேரம் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர், கிம் ஜாங் உன் ரஷ்யா செல்ல ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அணிவகுப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் சீனப் பயணத்தில் இருந்த பிரதமர் மோடி, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இந்தியா திரும்பி உள்ளார்.