ஆர்சிபிஎல் நிறுவனத்தின் சார்பில் ‘வெல்வெட்’ அழகு சாதனப் பொருட்கள் மீண்டும் அறிமுகம்
ரிலையன்ஸ் கன்ச்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL) இந்திய சந்தையில் முன்னணி நுகர்வோர் பொருள் நிறுவனமாக வளர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாரம்பரிய பிராண்டான ‘வெல்வெட்’ தயாரிப்புகளை புதுப்பித்து உலகளவில் மீண்டும் அறிமுகப்படுத்தும் உரிமத்தை ஆர்சிபிஎல் சமீபத்தில் பெற்றுள்ளது.
இந்த முயற்சியின் முதல்கட்டமாக, நவீன நுகர்வோரின் தேவைகளுக்கேற்ப புதுமையாக வடிவமைக்கப்பட்ட வெல்வெட் அழகு சாதனப் பொருட்கள் சென்னையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.
பிராண்டின் விளம்பர தூதராக நடிகை கீர்த்தி ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அறிமுக விழாவில் கலந்துகொண்ட ஆர்சிபிஎல் நிறுவன இயக்குநர் டி. கிருஷ்ணகுமார் பேசுகையில்,
“தமிழகத்தின் பெருமையான வெல்வெட் பிராண்டை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி. உலகம் முழுவதும் தரமான பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்கில் நாங்கள் செயல்படுகிறோம். அதோடு, இந்திய பாரம்பரிய பிராண்டுகளை மீண்டும் உயிர்ப்பிக்கவும் உறுதியாக செயல்படுகிறோம்,”
என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“கடந்த 3 ஆண்டுகளில் கேம்பா, சில் போன்ற பிராண்ட்களை கையகப்படுத்தி வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வருகிறோம். தற்போது சி.கே. ராஜ் குமார் தொடங்கிய வெல்வெட் பிராண்டையும் புதுப்பித்து, இளம் தலைமுறையின் விருப்பங்களுக்கு ஏற்ப புதிய வடிவத்தில் கொண்டு வந்துள்ளோம். நவீன தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த வரிசையில் ஷாம்பூ, சோப்பு, கண்டிஷனர், ஷவர் ஜெல், பாடி லோஷன் மற்றும் டால்கம் பவுடர் போன்ற பொருட்கள் அடங்கும்.”
“நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆழமான ஆய்வுக்குப் பிறகு இப்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இதனை பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகிறோம். பொருட்களின் விலை மிகக் குறைவாக — ஷாம்பூ பாக்கெட் ரூ.2 முதல் கிடைக்கும்,”
என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் வெல்வெட் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. விரைவில் தென் மாநிலங்கள் மற்றும் இந்தியா முழுவதும் அவற்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தேவையான மாற்றங்களும் செய்யப்படும் என அவர் கூறினார்.
இந்நிகழ்வில் ஆர்சிபிஎல் செயல் இயக்குநர் கேட்டன் மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.